Tuesday 18 April 2017

'அட்டு' படத்தில் நடித்த நடிகரின் 'அட்டு'காச அனுபவங்கள் !

அண்மையில் வெளிவந்துள்ள படம் 'அட்டு'. இது வடசென்னையில் குப்பைமேடு பின்னணியில் நடக்கும் சமூக விரோத காரியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம். ரத்தன் லிங்கா இயக்கியிருக்கிறார்
இப்படத்தின் கதையின் திருப்புமுனையாக நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் நடிகர் பிரபாகர்.

படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பிரபாகர் இங்கே கூறுகிறார். "சினிமா ஆர்வம் என்னைப் பாடாய்ப் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். 

அது மறக்க முடியாத அனுபவம் தான் என்றாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காகவே நீண்டநாள் காத்து இருந்தேன்.
அப்படி ஒரு திருப்பு முனை வாய்ப்பாக வந்த படம் தான் 'அட்டு'. . இப்படத்தின் கதையை இயக்குநர் ரத்தன் லிங்கா அவர்கள் சொன்ன போதே அந்த அழுக்கு மனிதர்களின் வாழ்க்கையும் சூழலும் செயல்களும் எனக்குப் பிடித்து விட்டது.
படமாக்கும் போதுதான் மிகவும் சிரமப் பட்டோம். காலையில் 6,30க்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய்விட வேண்டும். எல்லாம் முடிந்து வீடு திரும்ப இரவு 10 .30 மணி ஆகிவிடும். கொடுங்கையூர் குப்பை மேட்டில்தான் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. முடிந்து தினமும் அலுவலகம் வர வேண்டும். வந்து அடுத்த நாள் அங்கே எடுக்கப் போகும் காட்சிகள் திட்டங்கள் பற்றிய ஏற்பாடுகளை அறிந்து கொண்ட பிறகுதான் வீடு செல்ல வேண்டும்.
படப்பிடிப்பு நடக்கும் கொடுங்கையூர் குப்பை மேட்டில் எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை மயம்தான். ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும்.இன்னோரிடத்தில் விஷப்புகை மேலே வந்துகொண்டிருக்கும்..


குப்பை என்றால் வெறும் காகிதம் அல்ல. இரும்புக் கம்பிகள், பாட்டில்கள் ஓடு என்று எதுவேண்டுமானாலும் புதைந்து இருக்கும்.எச்சரிக்கையாக காலடி எடுத்து வைக்க வேண்டும்.அப்படி 150 ஆண்டாக குப்பை சேர்த்து வரும் இடமாம் அது.

எங்கு பார்த்தாலும் குப்பை. மக்கிய நாற்றம், புகை, அழுகல் என இருக்கும். இப்படி 150 ஏக்கர் என இருக்கும்.. சாப்பிடுவதும் அங்கு கஷ்டமாக இருந்தது. அது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல. என்றாலும் நடித்தோம்.

அங்கே எங்களில் சிலருக்கு மூச்சுப் பிரச்சினை வந்தது. இருமல், தும்மல் வந்தது. -ஒரு நாள் தயாரிப்பாளர் படப்பிடிப்பைப் பார்க்க அங்கே வந்தார். எங்களின் நிலைமையைப் புரிந்து கொண்டார்.

எனக்கே இப்படி என்றால் 50 நாட்களுக்கும் மேல் அங்கேயே தங்கி படமெடுத்த இயக்குநருக்கு எப்படி இருக்கும்?

இப்படி சோழிங்கநல்லூர் போன்ற வேறுபல இடங்களிலும் எடுத்தார்கள்.
எனக்கு 8 ஆண்டு காலப் போராட்டம் , படம் 3 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது.

படத்தில் என்மேல்தான் இண்டர் வெல் திருப்பம் முடியும். படம் பார்த்து பலரும் பாராட்டும் போது எல்லா கஷ்டங்களும் காணாமல் போய்விடுகின்றன.தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சார் என்னைப்பற்றி பாராட்டிக் கூறியது மறக்க முடியாது. அவரது ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி கூற வேண்டும். அவர் வெளியிட்டதும் 'அட்டு 'படம் பிரமாண்டமாகி விட்டது.
'அட்டு' வுக்குப் பின் அதர்வாவின் 'ஒத்தைக்கு ஒத்தை' படத்தில் நடிக்கிறேன். அதில் பாசிட்டிவ் ரோல். ''

சொல்லி முடிக்கும் போது பிரபாகரின் கண்களில் ஆயிரம் கனவுகள் தெரிகின்றன.
இந்தப் பிரபாகர் பிரபல நடிகர் ஸ்ரீமனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...